×

அதிமுக ஆட்சியில் காவிரி நீரை விவசாயத்திற்காக எடுக்க அதிக திறன் கொண்ட மின்மோட்டார்களை இபிஎஸ், குடும்பத்திற்கு வழங்க அனுமதி: அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு


சென்னை: சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளால் காவிரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் தொடங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சேலம், வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், சங்கத்தில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த மட்டுமே முடியும். ஆனால், 27 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்த சட்டவிரோதமாக அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எவ்வளவு தண்ணீர் காவிரியில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை அளவிட எந்த மீட்டரும் இல்லாமல், தொடர்ச்சியாக நீர் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2023ம் ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தினர் காவிரியில் இருந்து நீர் எடுப்பதை மீட்டர் பொருத்தி கண்காணித்து முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அதிமுக ஆட்சியில் காவிரி நீரை விவசாயத்திற்காக எடுக்க அதிக திறன் கொண்ட மின்மோட்டார்களை இபிஎஸ், குடும்பத்திற்கு வழங்க அனுமதி: அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,EPS ,Cauvery ,CHENNAI ,Nedungulam ,Salem district ,Nedungulam Neerertu Pasana Cooperative Sangam ,Former ,Chief Minister ,Edappadi Palaniswami ,AIADMK government ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி